கோப்புப் படம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா வரும் 21-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மற்றும் மாசி மாதங்களில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.
அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் மகர லக்னத்தில், கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
வரும் 25-ம் தேதி மேலக்கோயிலில் இரவு 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 27-ம் தேதி அதிகாலை சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்று காலை 9 மணியளவில் ஆறுமுகப்பெருமான் வெட்டிவோ் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறறு.
மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சார்த்தி கோலத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரும் 28-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் சுவாமி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வௌ்ளைச் சார்த்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வருகிறார்.
தொடர்ந்து மேலக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேருகிறார்.
மார்ச் 2-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் ரத வீதியில் வலம் வந்து அருள் பாலிகின்றனர்.
மார்ச் 3-ம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 4-ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.