திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 25-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இதுவரை தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தாயாரை தரிசனம் செய்தனர். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.15 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் பத்மாவதி தாயார் மாட வீதிகளில் கம்பீரமாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலர் தேரை வடம் பிடித்து இழுத்தும், தேரின் மீது உப்பு, மிளகு போன்றவற்றை தூவியும் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து, தாயாருக்கு கிருஷ்ண மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் மாட வீதிகளில் எழுந்தருளினார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர்.
இன்று கோயில் அருகே உள்ள பத்மகுளத்தில் பஞ்சமி தீர்த்தம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. நண்பகல் 12 மணி முதல் 12.10 மணிக்குள் சக்கர ஸ்நானம் நடைபெற உள்ளது.
முன்னதாக விஸ்வகேசவர், பத்மாவதி தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு பத்ம குளம் அருகே சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பாக செய்துள்ளது.