ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவத்தின் கடைசி நாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத் தில் சேவை சாதித்த நம்பெருமாள். | படம்: ர.செல்வமுத்துகுமார் |
திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.19-ல் திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பாடு கண்டருளினார்.
சவுரி சாயக்கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய், சூர்ய - சந்திர வில்லை, சிவப்புக்கல் நெற்றிப்பட்டை, முத்துப்பட்டையை பக்கவாட்டில் கொண்டையில் அணிந்து, காதில் வைர மாட்டல், தோடு, ஜிமிக்கி, வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்து, திருமேனியில் பங்குனி உத்திர பதக்கம், தாயார் வைரத் திருமாங்கல்யம், தொங்கல் பதக்கம், வரிசையாக அடுக்கு பதக்கங்கள், பெரிய பவழ மாலை, காசு மாலை, 2 வடமுத்து மாலை, வலது திருக்கையில் தங்க கோலக்கிளி, இடது திருக்கையில் வரிசையாகவில்வ பத்ரம், தாயத்து சரங்கள், வளையல், பவழ கடிப்பு, வில்வபத்ர தொங்கல் சாற்றி, திருவடியில் - சதங்கை, தண்டை அணிந் திருந்தார்.
பின் சேவையாக, பின்னல் ஜடை, அதன்மேல் ஜடை தாண்டா, திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி, ஜடைக்கு மேல் நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா, புஜ கீர்த்தி, கச்சு எடுத்து கட்டி, அதில் அரைச் சலங்கை தொங்க விட்டுக்கொண்டு, ரங்கூன் அட்டிகை, ஒட்டியாணம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்திருந்தார்.
மேலும், வெண்பட்டு உடுத்தி, வலது திருவடியை மடித்து அமர்ந்தும், இடது திருவடியை, திருக்கை தாங்க அமர்ந்தும், அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஆண்டுக்கொரு முறை மட்டுமே நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் சேவை சாதிப்பார் என்பதால் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
விழாவின் மிக முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச.30) அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது. இதனால் ஸ்ரீரங்கம் கோயில் வளாகம் மற்றும் கோபுரங்கள் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.