சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க ஆர்வமுடன் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள்.
குமுளி: சபரிமலையில் வெயில், மழை என மாறுபட்ட காலநிலை நிலவி வந்தாலும் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் கன்னிமாத (புரட்டாசி) வழிபாடுகளுக்காக, கடந்த 16-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம் மதத்தன்முன்னிலையில், மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி பல்வேறு பூஜைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று அதிகாலை கணபதி ஹோமம், சந்தன அபிஷேக ஊர்வலம், படிபூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
மண்டல, மகரவிளக்கு திருவிழாவில் கூட்டம் அதிகம் இருப் பதால், பலரும் தற்போது மாதாந்திர வழிபாடுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த சில மாதங்களாகவே மாதாந்திர வழிபாடுகளுக்கும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பருவமழை காரணமாக மலையேறுவதில் சிரமம் இருந்தது. மேலும், ரானி, பத்தினம்திட்டா, நிலக்கல் உள்ளிட்ட மலைச் சாலைகளில் வாகனங்களை இயக்குவதிலும் இடர்பாடு இருந்து வருகிறது. நேற்று காலை மழை குறைந்ததால், பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
ஆனால், பிற்பகலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. மாறுபட்ட காலநிலை நிலவியபோதும், பக்தர்கள் பக்தியுடன் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். மாதாந்திர வழிபாடுகள் முடிந்து நாளை இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது.