நாகப்பட்டினம்: பிரசித்திப் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 469-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு புனிதக் கொடி ஊர்வலம் நேற்று மாலை நாகை மீரா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டது.
யாகூசன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளித் தெரு, வெங்காய கடைத்தெரு, பெரியகடை வீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, பால்பண்ணைச்சேரி வழியாக நடைபெற்ற கொடி ஊர்வலம் இரவு நாகூரைச் சென்றடைந்தது.
ஊர்வலத்தில் மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் என ஏராளமான வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. நாகூர் எல்லையை அடைந்த ஊர்வலத்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நாகூரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற கொடி ஊர்வலம் இரவு 9 மணிக்கு மேல் தர்காவை வந்தடைந்தது.
பின்னர், நாகூர் தர்கா பரம்பரை கலிபா சிறப்பு துவா ஓதியதும், 5 மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டன. விழாவையொட்டி நாகூர் ஆண்டவர் தர்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாகூர் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையொட்டி, போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 30-ம் தேதி இரவு நாகையில் இருந்து சந்தனக் கூடு ஊர்வலம் புறப்பாடு, டிச. 1-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் ஆகியவை நடைபெறுகின்றன.