திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான வெண்ணைத்தாழி உற்சவம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழாவின் ஒவ்வொரு நாள் இரவும், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு கோரதத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 7.30 மணி அளவில் வெள்ளி குடத்தில் வெண்ணெய் திருடும் கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி ராஜகோபால சுவாமி வீதியுலா வந்த போது, பக்தர்கள் சுவாமி மீது வெண்ணை வீசி வழிபட்டனர்.
தொடர்ந்து ராஜகோபால சுவாமி கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து, பந்தலடி வழியாக வெண்ணைத்தாழி மண்டபத்தை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் மன்னார்குடி மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் மன்னார்குடி சுற்றுப்புற கிராம மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ராஜகோபாலசுவாமி மீது வெண்ணை வீசி வழிபட்டனர். இன்று இரவு வெட்டும் குதிரை திருவிழா நடைபெறுகிறது. நாளை தேரோட்ட விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.