சபரிமலை கோயில் பாதுகாப்புக்காக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவலர் குழு.
குமுளி: சபரிமலை கோயிலில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டல வழிபாடு நடந்து வருகிறது. தொடக்க நாட்களில் வரையறையின்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடி தரிசன புக்கிங் 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், கேரள டிஜிபி ரவுடா சந்திரசேகர் நேற்று சந்நிதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர், 2-வது பிரிவு காவலர் குழு நேற்று கோயில் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றது. இதில் 1,543 பேர் உள்ளனர்.
இந்தக் குழுவில் ஒரு உதவி சிறப்பு அதிகாரி (ஏஎஸ்ஓ), 10 துணைக் கண்காணிப்பாளர்கள், 34 ஆய்வாளர்கள் உள்ளனர். சிறப்பு அதிகாரி எம்.எல்.சுனில், பக்தர்களை கையாள்வது குறித்த இவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதையடுத்து, பெரிய நடைப் பந்தலில் 2-ம் பிரிவு போலீஸார் உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், சுவாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜன. 10-ம் தேதி வரை நிறைவடைந்துள்ளன.
பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் மாற்றி அமைக்கப்படுவதுடன், பல மணி நேரம் பதிவுக்காக காத்திருக்கும் நிலையும் உள்ளது. நேற்று வரை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது.