குமுளி: சபரிமலையில் 41 நாள் தொடர் வழிபாட்டுக்குப் பிறகு நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக, ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்க அங்கியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஆகியோர் ஐயப்பனுக்கு நேற்று முன்தினம் அணிவித்தனர்.
உச்ச நிகழ்வாக நேற்று நடைபெற்ற மண்டல பூஜையை யொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
மீண்டும் 30-ம் தேதி... இரவு 10.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கோயில் நடை சாத்தப்பட்டது. ஜன. 14-ம்
தேதி மகரபூஜை நடைபெற உள்ளது. இந்த வழிபாட்டுக்காக வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. வருவாய் அதிகரிப்பு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறும்போது, “இந்த மண்டல காலத்தில் கோயிலுக்கு ரூ.332.77 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த சீசனைவிட இம்முறை வருவாய் அதிகம். மகரவிளக்குக்கு நடைதிறக்கும் போது 12 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்படும்.
ஜன. 20-க்குப் பிறகு தபால் மூலம் அரவணையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்வது தொடர்பாக வரும் 29-ம் தேதி திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். புல்மேடு வனப்பாதையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என்றார்.