திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, அண்ணாமலையார் சந்நிதி எதிரேயுள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கொடியேற்றி வைக்கின்றனர்.
அப்போது, பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பின்னர், பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா, இரவு வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் வீதியுலா நடைபெறுகிறது. டிச. 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.