ஆன்மிகம்

பழநி | உலக நன்மைக்காக ஜப்பானியர்கள் நடத்திய சிறப்பு யாகம்

ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக நன்மை வேண்டி இன்று புதன்கிழமை (பிப்.25) காலை சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலையடிவாரத்தில் போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது. இங்கு இன்று (புதன்கிழமை- பிப்.25) காலை உலக நன்மை வேண்டி, ஶ்ரீலஶ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், ஜப்பானிய ஆன்மிக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சிறப்பு யாகம் நடந்தி வழிபட்டனர்.

இதில், ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் மனமுருகி வேண்டினர். தொடர்ந்து, அவர்கள் பழநி மலைக்கோயிலுக்கு சென்று ‘வெற்றிவேல், வீரவேல், முருகனுக்கு அரோகரா' என, பக்தி கோஷமிட்டபடி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆனந்த விநாயகர், கைலாசநாதர், போகர் சித்தர் சமாதி உட்பட அனைத்து சந்திதிகளுக்கும் சென்று வழிபட்டனர்.

          
SCROLL FOR NEXT