ஆடிப்பெருக்கு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பூஜைகள் செய்து வழிபட்ட பெண்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும். இந்த நாளில் நீர்நிலைகளில் நீர் பெருகி வரவேண்டும்.
தண்ணீர் பஞ்சம், உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பூஜை செய்து மக்கள் வழிபடுவார்கள். இந்த நாளில் புதிதாக தொழில் தொடங்கினால் அது அதிகளவில் வளர்ச்சி அடையும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் மக்கள் நிலம் உள்ளிட்டவற்றை இந்த நாளில் வாங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
காவிரி, வைகை, தாமிரபரணி
தமிழகத்தில் திருச்சி காவிரிக் கரையில் இந்த விழா உற்சாக கொண்டாடப்படும். திருச்சியை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி, மதுரை வைகை ஆற்றங்கரையிலும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடக்கும். அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மக்கள் கூடி வழிபாடு செய்தனர். சென்னையைப் பொருத்தவரை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று திருமணமான பெண்கள், புத்தாடை உடுத்தி பழைய தாலி கயிற்றுக்கு பதிலாக புதிய மஞ்சள் கயிற்றில், திருமாங்கல்யம் அணிந்து வழிபாடு செய்தனர். மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் உள்ளிட்ட பல கோயில் குளங்களிலும் மக்கள் வழிபட்டனர்.
திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் சிறப்புப் பிரார்த்தனை செய்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கை ஒட்டி மயிலாப்பூர் கோலவிழியம்மன், முண்டகக்கன்னியம்மன், பாரிமுனை காளிகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடையம்மன், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
மக்கள் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். நீர்நிலைகளில் வழிபாடு நடத்த முடியாத சென்னை வாசிகள் பலர் வீட்டில் பூஜை செய்து வழிபட்டனர்.