வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று நடைபெற்ற புனித வெள்ளி வழிபாட்டில் பங்கேற்றோர்.
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற புனித வெள்ளி வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு பிப்.18-ம் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. மார்ச் 29-ம் தேதி குருத்தோலை பவனி நடைபெற்றது. நேற்று முன்தினம் பெரிய வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு, திருப்பலி நடைபெற்றது.
சிறப்பு திருப்பலி
இதையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று காலை முதல் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து, பேராலயத்தில் உள்ள கலையரங்கில் நேற்று இரவு புனித வெள்ளியை முன்னிட்டு பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத் தந்தை அற்புதராஜ் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்.
பின்னர், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை சிலுவைப் பாதை ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். அப்போது, இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூர்ந்து, கண்ணீர் விட்டபடி அவரது பாதத்தை தொட்டு வணங்கினர்.
இதில், பல்லாயிரக்கணக் கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு உயிர்த் தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஏப்.5) நடைபெற உள்ளது.