ஆன்மிகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலம்

செய்திப்பிரிவு

வரதராஜ பெருமாள் கோயி லின் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவின் முக்கிய நிகழ் வான கருட சேவை உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

காஞ்சி வரதராஜர் கோயிலில் கடந்த 25ம் தேதி, வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த 13 நாள் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று, அதிகாலை 3:30 மணியளவில் பெருமாள் கோயிலின் உள் பிரகாரத்தில் இருந்து தங்க கருடவாகனத்தில் கோபுர தரிசனத்துக்காகப் புறப்பட்டார். பின்னர், காலை 4:45 மணியளவில் வரதர் கோபுர வாசலைக் கடந்து வந்தபோது, கூடிநின்ற லட்சக் கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அங்கிருந்து புறப்பட்ட சுவாமி வீதி உலா, காஞ்சிபுரத்தின் முக்கிய ராஜ வீதிகளான நெல்லுக்காரத் தெரு, காந்தி சாலை வழியாக மூங்கில் மண்டபம், பிள்ளையார் பாளையம், விளக்கொளி பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பல் வேறு பகுதிகள் வழியாகச் சென்று மதியம் மீண்டும் கோயிலைச் சென்றடைந்தது.

இந்தக் கருட சேவையைக்காண 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மேலும், பெருமாளைத் தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் நகரின் பல இடங்களில் ஆங்காங்கே அன்னதானம், மோர், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் தலைமையில் சுமார் 800 போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதிய மற்றும் பழைய ரயில் நிலையங்கள், ஒலிமுக மதுப்பேட்டை, ஓரிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, சாமி ஊர்வலம் சென்ற பாதைகளில் தற்காலிகமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்வாரி யத்தினர் கண்காணித்தனர். தொடர்ந்து ஜூன் 3ம் தேதி திருத்தேர் உற்சவமும், ஜூன் 5-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளன. பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள், மீஞ்சூர் வரத ராஜப் பெருமாள் கோயில்களில் நேற்று கருட சேவை மிக விமரிசையாக நடைபெற்றது.

SCROLL FOR NEXT