வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததையடுத்து இன்று காலை 8 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழாவுக்காக ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
முதல் நாளான ஆகஸ்ட் 10-ம் தேதி ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு 12 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியதை அடுத்து பாதுகாப்பு கருதி ஆகஸ்ட் 11-ம் தேதி (நேற்று) சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று பிற்பகலில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக வானத்துறை தெரிவித்ததை அடுத்து, இன்று (ஆகஸ்ட் 12ம் தேதி) ஆடி அமாவாசைக்கு பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று இரவு சதுரகிரி மலைப்பகுதியில் பெரிய மகாலிங்கம் அருகே காட்டுத்தீ பரவியது தெரியவந்ததை அடுத்து, இயல்பு நிலை திரும்பும் வரை புதன்கிழமை சதுரகிரி மலையேற தடை விதிக்கப்படுவதாகவும், நிலைமை சீரான பின் பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்படும் என மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
தர்ணாவில் ஈடுபட்ட பக்தர்கள்
இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (புதன் கிழமை) காலை 5 மணி அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் திரண்டனர். போலீஸார் சதுரகிரி மலையேற அனுமதி இல்லை எனக்கூறியதால் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போலீஸாரிடம், சாப்டூர் மற்றும் வருசநாடு வழியாக பக்தர்கள் சென்று வரும் நிலையில், தாணிப்பாறை வழியில் மட்டும் ஏன் அனுமதி அளிக்க மறுக்கிறார்கள் என கூறி பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சதுரகிரி மலையேற அனுமதி- இந்நிலையில், இன்று காலை 8 மணி அளவில் சதுரகிரி மலைப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டத்தையடுத்து பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
30 ஆயிரம்+ பக்தர்கள் தரிசனம்:
காலை 8 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தாணிப்பாறை மட்டுமின்றி வாழைத்தோப்பு மற்றும் வருசநாடு மலைப்பாதை வழியாகவும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு சந்தன மகாலிங்கம் சுந்தரமகாலிங்கம் சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர் எஸ்பிக்கள் தலைமையில் 1,500- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.