கோப்புப் படம்
தேனி: சபரிமலையில் சிறுவர், சிறுமிகள் சிரமமின்றி தரிசனம் செய்கிறார்களா என்பது தொடர்பாக, கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கோயிலில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.
சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான குழந்தைகளும், முதியவர்களும் வந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் 18-ம்படி ஓரப் பகுதியில் ஏறிச்செல்ல அனுமதிக்கப்பட்டு, காவலர்கள் மூலம் தூக்கி விடப்படுகின்றனர். இந்நிலையில், சபரிமலையில் குழந்தைகள் நலனை உறுதிசெய்யும் வகையில், கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் நேற்று சபரிமலைக்கு வந்தது. ஆணையத் தலைவர் கே.வி.மனோஜ்குமார், உறுப்பினர்கள் பி.மோகன்குமார் கே.கே.ஷாஜு உள்ளிட்டோர் சந்நிதானத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் சபரிமலை காவல் துறை தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏடிஜிபி ஸ்ரீஜித், தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரை சந்தித்து, குழந்தைகள் தரிசனம் செய்வதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, பெரிய நடைப்பந்தல், 18-ம்படி, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகளில் ஆணையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வரிசையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அனைத்து குழந்தைகளுக்கும் மணிக்கட்டு பட்டைகளை அணிவதை உறுதி செய்யவேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.