ஆன்மிகம்

757 திருக்கோயில்களுக்கான அறங்காவலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 757 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46 (1) ன் கீழ் உள்ள 673 திருக்கோயில்களுக்கும் மற்றும் 46(2) ல் உள்ள 84 திருக்கோயில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

அறங்காவலர் நியமன அறிவிப்பு, திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். 12.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே, சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் உள்ள 220 திருக்கோயில்களுக்கும், நிர்வாகத்திட்டம் உள்ள 35 திருக்கோயில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT