ஆன்மிகம்

ஆடி அமாவாசை: திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இ.ஜெகநாதன்

திருப்புவனம்: ‎ஆடி அமாவாசையையொட்டி, திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டனர்.

‎‎சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர்- சவுந்திர நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பாக உள்ள வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது காசிக்கு நிகராக கருதப்படுகிறது. தினமும் பலர் இங்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இன்று ஆடி அமாவாசையையொட்டி அதிகாலையிலேயே ஏராளமானோர் வைகை ஆற்றில் குவிந்தனர்.

தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள், புஷ்பவனேசுவரர் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களின் வருகையையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ‎மேலும், தேவஸ்தானம் சார்பில் திதிக்கு ரூ.100, தர்ப்பணத்துக்கு ரூ.50 கட்டணமாக வசூலித்த போதிலும் தர்ப்பணம் கொடுக்கும் பகுதியில் துணி மாற்றும் அறை, கழிவறை இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

மேலும், வாகன நிறுத்தும் வசதி இல்லாததால் வெளியூர்களில் இருந்து வந்தோர் நகரில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திச் சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாட்களில் கூட்டம் அதிகமாக குவியும் என்பதால், அந்த நாட்களில் வைகை ஆற்றுக்கு அருகிலேயே தற்காலிக வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்த வேண்டுமென என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT