ஆச்சாரியரின் அழைப்பு - சென்னை சொற்பொழிவுகள் ஆங்கில நூலின் மறுபதிப்பை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சி சங்கர மடத்தில் வெளியிட்டனர்.
சென்னை: காஞ்சி மகாஸ்வாமி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகபாஷணத்தை தொகுத்து 1964-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலின் மறுபதிப்பை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சி சங்கர மடத்தில் வெளியிட்டனர்.
காஞ்சி மகாஸ்வாமி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1957-58-ம் ஆண்டுகளில் சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் தங்கியிருந்தபோது, இந்து தர்மம், வேத, சாஸ்திர, புராணங்கள், தத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் அனுக்கிரகபாஷணம் வழங்கினார். இந்த உபதேச மொழிகள் ‘தி இந்து’ துணை தலைமை செய்தியாளர் வி.ராமகிருஷ்ணனால் பதிவு செய்யப்பட்டு, பத்திரிகையில் வெளியாகின.
மகாஸ்வாமியின் 75-வது ஜெயந்தி: ‘தி இந்து’ குழுமத்தினர் அளித்த ஊக்கத்தின்பேரில், மகாஸ்வாமி 1957-1960-ம் ஆண்டுகளில் வழங்கிய அனுக்கிரகபாஷணம் அனைத்தும் சம்ஸ்கிருத மேற்கோள்களுடன் தொகுக்கப்பட்டு, மகாஸ்வாமியின் 75-வது ஜெயந்தியை முன்னிட்டு 1964-ம் ஆண்டு ‘ஆச்சாரியரின் அழைப்பு’ என்று தலைப்பில் நூலாக (2 தொகுதிகள்) வெளியிடப்பட்டது. பின்னர், இந்நூல் 1995, 2022-ம் ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டது. வாசகர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் இந்நூல் பொருள்வாரியாக மறுவகைப்படுத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி சங்கர மடத்தில் நடைபெற்று வரும் யுகாதி, ஸ்ரீ ராம நவமி மகோற்சவத்தில், ஸ்ரீ மகாபெரியவா பிருந்தாவனத்தில்,இந்த ஆங்கில நூலின் மறுபதிப்பை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று வெளியிட்டனர். இந்நூலின் முதல் பிரதியை தி இந்து குழும பதிப்பக நிறுவனத்தின் தலைவர் நிர்மலா லஷ்மண் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மயிலாப்பூர் வேத அத்யயன சபையைச் சேர்ந்தவர்கள், தி இந்து குழும அலுவலர்கள் பங்கேற்றனர். ரூ.400 விலை கொண்ட இந்நூலை (இரு தொகுதிகள்) https://publications.thehindugroup.com/bookstore/ ஆன்லைன் இணைப்பு மூலம் பெறலாம்.