மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் நித்ய கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆதிவராகப் பெருமாள், தமது இடது தொடையில்,அகிலவல்லி தாயாரை அமர்த்தியும், இடது திருவடியை தம்பதியாய் இருக்கும் ஆதிசேஷன், வாசுகி மீதும், மற்றொரு திருவடியை பூமாதேவியாதி நிலத்தில் ஊன்றியும், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இங்கு, காலவ முனிவரின் 360மகள்களை, தினம் ஒரு மகள் வீதம், 360 பெண்களையும் மணம்புரிந்து கொள்வதால் நித்ய கல்யாண பெருமாள் என பெயர் பெற்றார். திருமணமாகாதவர் இக்கோயிலுக்கு வந்து வேண்டினால் தடை நீங்கி, திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். அசுர, குலகாலநல்லூர் வராகபுரி, நித்யகல்யாணபுரி என்கிற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் எம்பெருமான் பிராட்டியை இடது பக்கத்தில் வைத்திருப்பதால் திரு எடந்தை எனப் பெற்றது. இது நாளடைவில், மறுவி திருவிடந்தை எனப் பெயர் மாறியது.
இன்று புன்னையடி சேவை: இக்கோயிலில், சித்திரை மாதபிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், திருவிடந்தை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். இந்த, விழா வரும் 13-ம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து, சிறிய திருவடி சேவை நடந்தது. இன்று புன்னையடி சேவை நடக்க உள்ளது,
8-ம் தேதி கருட சேவை, 9-ம் தேதியானை வாகன சேவை, 10-ம் தேதி தேரோட்டம், இரவு தோளுக்கு இனியான் சேவை, 11-ம் தேதி குதிரை வாகன சேவை, 12-ம் தேதி சந்திர பிரபை, 13-ம் தேதி தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.