சென்னை: சென்னையில் ரம்ஜான் பண்டிகைகோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு தொழுகையின்போது இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இந்த மாதத்தில்தான் இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பதுகடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவர். இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு, கடந்தமார்ச் 24-ம் தேதி தொடங்கியது.
நோன்பு காலம் முடிந்தநிலையில், நேற்று முன்தினம் பிறை தென்பட்டதால், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னைதீவுத்திடலில் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில்ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
கூட்டுத் தொழுகைமுடிவடைந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல, சென்னை பாரிமுனையில் உள்ள டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும், திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல், பெரியமேடு பள்ளிவாசல், மண்ணடி ஈத்கா உட்பட பல்வேறு இடங்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று கூட்டுத் தொழுகை நடைபெற்றது.
பள்ளி வாசல்கள் முன்பு கூடியிருந்த ஏழைகளுக்கு முஸ்லிம்கள் புத்தாடை, உணவு வழங்கினர். ஒரு சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ரம்ஜான் தொழுகை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.