மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று சூரசம்ஹார லீலை நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கக் குதிரை, அன்ன, சேஷ வெள்ளி பூத உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
10-ம் திருநாளான நேற்றிரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி கவுதா சப்பரத்தில் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுத் தேவர் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர். பின்னர், சொக்கநாதர் கோயில் முன்பாக சூரசம்ஹார லீலை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று (ஏப்.7) இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ஏப்.8-ம் தேதி பிற்பகல் 12.20 மணியளவில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏப்.9-ம் தேதி காலை 6 மணியளவில் கிரிவல வீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.10-ம் தேதி தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.