சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, விழாவின் 8-ம் நாளான நேற்று 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். படம்: ம.பிரபு 
ஆன்மிகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு விழாவின் 8-ம் நாள் நிகழ்வான 63 நாயன் மார்கள் திருவீதி உலா நேற்றுகோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி பெருவிழாகடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, வெள்ளி ரிஷபவாகன பெருவிழா, சூரிய வட்டம், சந்திர வட்டம், அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற்றன.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன் தினம் (ஏப்.3) நடைபெற்றது. விழாவின் 8-ம் நாள் முக்கியநிகழ்வான 63 நாயன்மார்கள் திருவீதி உலா நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக, திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றைத் தொடர்ந்து அலங்கரிக்கப் பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், 63 நாயன் மார்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய’ என பக்தியுடன் முழக்கமிட்டனர்.

இதைத் தொடர்ந்து விநாயகர் முன்னே சப்பரத்தில் செல்ல வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி - தெய்வானை சமேத முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக் கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரசுவாமிகள் வீதியுலா வந்தனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் 63 நாயன்மார்களும் வீதியுலா வந்தனர். தொடர்ந்து, காவல் தெய்வமான கோலவிழியம்மனும் வீதியுலா வந்தார்.

63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் காட்சியை காண பிற்பகலில் இருந்தே சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

இந்ததிருவிழாவை யொட்டி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆங்காங்கே பந்தல் அமைத்துபக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்கினர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். கோயிலைச் சுற்றி மாட வீதிகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இவ்விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நாளை (ஏப்.6) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT