பழநி: பழநி பங்குனி உத்திரத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளினார். கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.4) மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். சுமார் 1,500போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.