மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் வெண்ணைத்தாழி திருவிழா - வெண்ணை வீசி வழிபட்ட பக்தர்கள் 
ஆன்மிகம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் வெண்ணைத்தாழி திருவிழா - சுவாமி மீது வெண்ணை வீசி பக்தர்கள் வழிபாடு

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் வெண்ணைத்தாழி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வீதி உலா வந்த சுவாமி மீது வெண்ணை வீசி வழிபாடு செய்தனர்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வைணவ கோயில்களில் ஒன்று ராஜகோபால சுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் 18 நாள் பங்குனி திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கடந்த 11-ம் தேதி அன்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது அன்று முதல் ஒவ்வொரு நாளும் ராஜகோபால சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

பங்குனி திருவிழாவின் மிக முக்கிய திருவிழாவான வெண்ணைத்தாழி திருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. அதை ஒட்டி ராஜகோபால சுவாமி வெண்ணை திருடும் கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் ராஜகோபால சுவாமி மீது வெண்ணை வீசி வழிபாடு செய்தனர்.

கோயிலின் நான்கு வீதிகள் வழியாக உலா வந்த ராஜகோபால சுவாமி, மேல ராஜா வீதி பந்தலடி வழியாக வெண்ணை தாழி மண்டபம் வந்தடைந்தார். அங்கு சாலையின் இரு மருங்கிலும் குழுமிய பக்தர்கள், சுவாமி மீது வெண்ணெயை வீசி கோபாலா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டபடி வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலை செட்டியார் அலங்காரமும், இரவு தங்க வெட்டு முதிரை வாகன வீதி உலாவும் நடைபெற உள்ளது. நாளை ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT