தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 3 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா வந்து கோயிலைச் சேர்ந்தது. அதிகாலை 5.20 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் மாசி திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு 16 வகையான அபிஷேகம், மகா தீபராதனை நடந்தது.
திருவாவடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள், சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், கோயில் இணை ஆணையர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு 7 மணிக்கு பாலவிநாயகர், அஸ்திர தேவருடன் தந்தப்பல்லக்கில் திருவீதி வலம் வந்து கோயிலைச் சேர்ந்தார். திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது.
மார்ச் 3-ம் தேதி மாலையில் சுவாமி சண்முகர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி சிவப்பு சார்த்தி வீதி உலா நடக்கிறது. 4-ம் தேதி அதிகாலை வெள்ளை சார்த்திய கோலத்திலும், பகல் 11.30 மணிக்கு பச்சை சார்த்திய கோலத்திலும் வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 6-ம் தேதி நடக்கிறது.