ராமேசுவரம்: கச்சத்தீவில் மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 3,500 இந்தியர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனு மதி அளித்துள்ளது.
கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலத்தையொட்டி, கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச்சில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக 2021-ம் ஆண்டு கச்சத்தீவு திரு விழாவை இலங்கை அரசு ரத்து செய்தது.
2022-ம் ஆண்டு கரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து 200 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக் கான திருவிழா மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவ பாலசுந்தரன் தலை மையில் நடைபெற்றது.
இதில், மார்ச் 3-ம் தேதி மாலை கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் திருவிழாவை தொடங்கி, அடுத்த நாள் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பங்குத் தந்தை களின் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு செய்வது, இலங்கையில் இருந்து 4,500 பேரையும், இந்தியாவில் இருந்து 3,500 பேரையும் திருவிழாவில் பங்கேற்க அனுமதிப்பது என முடிவு செய் யப்பட்டது.