திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒரு மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1.29 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயிலில் உள்ள மண்டபத்தில் இன்று(27-ம் தேதி) எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்க கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், துர்க்கை அம்மன் கோயிலில் சுமார் 70 உண்டியல்கள் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கையை கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் இணை ஆணையர் அசோக்குமார் மேற்பார்வையில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.
இதில் ரொக்கமாக 1,29,69,201 ரூபாய், 129 கிராம் தங்கம் மற்றும் 2,374 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.