ஆன்மிகம்

திருச்செந்தூர் கோயிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு பரம்பரைமுறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்புவெளியிடப்பட்டது.

அவ்வாறு வந்த விண்ணப்பங்கள், 7 பேர் கொண்ட மாநிலக் குழுவால் கடந்த ஜூலை 9-ம் தேதி பரிசீலிக்கப்பட்டது. பின்னர், தேர்வு செய்து பரிந்துரைத்துள்ள நபர்களின் பட்டியலை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த பட்டியலை அரசு கவனத்துடன் பரிசீலித்து, தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இந்திராநகர் வி.செந்தில்முருகன், திருச்செந்தூர் மானாடு தண்டுபத்து அனிதா குமரன், தூத்துக்குடி வடக்கு ஆத்தூர் ந.ராமதாஸ், சென்னை சாந்தோம் சல்லிவன் தெரு இரா.அருள்முருகன், தூத்துக்குடி போல்பேட்டை பா.கணேசன் ஆகிய 5 பேரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.

இந்த ஆணை வெளியிடப்படும் நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நியமிக்கப்படும் அறங்காவலர்கள், அறங்காவலர் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நாளில் இருந்து 2 ஆண்டு காலம் அப்பதவியில் இருப்பார்கள்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT