டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை தொடங்கியது. இதன் அடையாளமாக கங்கோத்ரி யமுனோத்ரி கோயில்கள் நேற்று திறக்கப்பட்டன.
உத்தராகண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள கோயில்கள், கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த நான்கு கோயில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை ‘சார்தாம் யாத்திரை’ என்று அழைக்கப்படுகிறது.
அட்சய திருதியை நாளான நேற்று கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டு சார்தாம் யாத்திரை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சாமி சிலைகள் வேதமந்திரங்கள் முழங்க கொண்டுவரப்பட்டன. கங்கோத்ரி கோயில் நேற்று காலை 11.15 மணிக்கும் யமுனோத்ரி கோயில் பகல் 12.15 மணியளவிலும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கங்கோத்ரி கோயில் திறப்பு நிகழ்ச்சியில் உத்தராண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அதிகாரிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண் டனர்.
கேதார்நாத் கோயில் வரும் 6-ம் தேதியும் பத்ரிநாத் கோயில் 8-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.