திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.79.74 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் உண்டியல்கள் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது. அதேபோல் கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில், அஷ்டலிங்கக் கோயில்கள், திருநேர் அண்ணாமலை கோயில், துர்க்கை அம்மன் கோயில்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டு காணிக்கை பெறுவது வழக்கம். அவ்வாறு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும்.
அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி இன்று (29-ம் தேதி) நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 உண்டியல்களில் சேகரிக்கப்பட்ட காணிக்கையை வகைப்படுத்திக் கணக்கிடப்பட்டது.
அதில், ரொக்கமாக ரூ.79 லட்சத்து 74 ஆயிரத்து 868, 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராக்கள் மூலமாகப் பதிவு செய்யப்பட்டது.