அரியலூர் மாவட்டம் புதுக்கோட்டை தூய மங்கள அன்னை ஆலய ஆண்டு விழாவையொட்டி ஆலய வளாகத்தில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்றம்.  
ஆன்மிகம்

அரியலூர் தூய மங்கள அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெ.பாரதி

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தூய மங்கள அன்னை ஆலயத்தின் 86-ம் ஆண்டு பெருவிழா இன்று (ஏப்.04) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நிகழ்ச்சியில் காலை 8 மணியளவில் பக்தர்கள் தூய மங்கள அன்னை உருவம் தாங்கிய கொடியை வாணவேடிக்கை, இன்னிசையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, ஆலய வளாகத்தில், பங்குத்தந்தை ரெஜிஸ் தலைமையில் குடந்தை பங்குத்தந்தை சாம்சன் கொடியைப் புனிதப்படுத்தினார். தொடர்ந்து, ஆலய வளாகத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறவும், கரோனா தொற்றுப் பரவாமல் இருக்கவும் பக்தர்கள் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஜெபங்கள் மற்றும் வாணவேடிக்கையுடன், அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, ஆலயத்தில் பங்குத்தந்தை ரெஜிஸ் தலைமையில், குடந்தை பங்குத்தந்தை சாம்சன் அடிகளாரால் எல்லாம் நன்றாய் இருக்கிறதா என்ற மறையுரையில் திருப்பலி நடைபெற்றது. மேலும், இந்தப் பெருவிழாவில், 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பல்வேறு மாவட்ட பங்குத்தந்தையர்களால் திருப்பலி நடைபெறுகிறது.

விழாவில், 9-ம் தேதி இரவு தூய மங்கள மாதா தேர் பவனியும், 10-ம் தேதி இரவு அன்னையின் அலங்கார ஆடம்பரத் தேர் பவனியும் நடைபெறுகிறது. 11-ம் தேதி காலை 11 மணிக்குக் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலையில் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT