காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர பிரமோற்சவ விழாவின் ஒரு பகுதியாக இன்று (மார்ச் 30) காரைக்கால் அம்மையாரின் ஐக்கிய விழா நடைபெற்றது.
63 நாயன்மார்களில் மூத்த பெண்பால் புலவரும், சிவ பெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவரும், தென்னக இசையின் தாயாக விளங்கக் கூடியவருமான புனிதவதியார் என்று அழைக்கப்படும் காரைக்கால் அம்மையார், சிவ பெருமானிடம் ஐக்கியமானதைக் குறிப்பிடும் வகையில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திர நாளில், அம்மையார் ஐக்கியப் பெருவிழா காரைக்காலில் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு அம்மையார் ஐக்கிய விழாவை முன்னிட்டு இன்று, காரைக்கால் அம்மையார் கோயிலில் அம்மையாருக்குச் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, வெள்ளி அங்கி அணிவித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இன்று மாலை அம்மையார் வீதியுலாவும், பின்னர் இரவு கைலாசநாதர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் அம்மையார் இறைவனுடன் ஐக்கியமானதைக் குறிக்கும் வகையிலான நிகழ்வும் நடைபெற உள்ளன.