மாசி செவ்வாய்க்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி நாளில், பிள்ளையாரை வணங்குவோம். முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில், கந்தபெருமானை வணங்குவோம். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்கையை வணங்கிப் பிரார்த்திப்போம்.
மாசி மாதம் மகத்துவமான மாதம். வழிபாட்டுக்கான மாதம். பூஜைகள் செய்வதற்கும் ஹோமங்கள் நடத்துவதற்கும் உரிய மாதம். கலைகளையும் கல்வியையும் கற்றுக்கொள்ள உகந்த மாதம். இந்த மாதத்தில் எல்லா நாளும் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. உரிய நாளில், அந்தந்த தெய்வங்களை வணங்குவதும் பிரார்த்தனை செய்வதும் எண்ணற்ற பலன்களைத் தரவல்லது.
மாசி மாதத்தில், சங்கட ஹர சதுர்த்தி நன்னாளில் விநாயகப் பெருமானை வணங்கலாம். அருகம்புல் மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யலாம். வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டுவோம்.
அதேபோல், செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கு உரிய நாள். செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள். எனவே, முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து பிரார்த்திப்போம்.
செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உரிய நாட்கள். துர்கைக்கு உரிய நாட்கள். செவ்வாய்க்கிழமைகளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பது விசேஷம். அதேபோல், கோயிலில் குடிகொண்டிருக்கும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது தீய சக்திகளை விரட்டியடிக்கும். எதிர்ப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையில், சங்கட ஹர சதுர்த்தியும் இணைந்திருக்கும் நாளில், அண்ணன் ஆனைமுகனையும் தம்பி ஆறுமுகத்தையும் வணங்குவோம். துர்காதேவியை தீபமேற்றி பிரார்த்திப்போம்.
விநாயகர் அகவல் பாராயணம் செய்வோம். விநாயகப் பெருமானுக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்துவோம். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தனை வணங்குவோம். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வோம். துர்காஷ்டகம் பாராயணம் செய்து சிவாலயத்தின் கோஷ்டத்தில் உள்ள துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவோம். செவ்வரளி மலர்களை, செந்நிற மலர்களை சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்வோம். மங்காத செல்வம் தந்திடுவாள் தேவி. மாங்கல்ய பலம் காத்திடுவாள் அன்னை.