காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் ஒரு நிகழ்வாக தேரோட்டம் இன்று (பிப்.24) நடைபெற்றது.
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 15 நாட்கள் சிறப்பான வகையில் நடைபெறும், பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியாருடன் நித்ய கல்யாணப்பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது.
கன்னடியார் வீதி, மாதாக்கோயில் வீதி, லெமர் வீதி, பாரதியார் சாலை வழியாகத் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின் நிறைவாக காரைக்கால் அம்மையார் கோயில் குளத்தில் (சந்திர புஷ்கரணியில்) நித்யகல்யாணப் பெருமாள் தீர்த்தவாரி நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினா், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாளுடன் இணைந்து திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் நடைபெறும் மாசி மக தீர்த்தவாரி 27-ம் தேதி, தெப்போற்சவம் மார்ச் 1-ம் தேதி, விடையாற்றி 2-ம் தேதி நடைபெறவுள்ளது.