கார்த்திகைச் செவ்வாயில், அழகன் முருகனை வணங்கி வழிபடுங்கள். வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். வளமும் சுபிட்சமும் தந்தருள்வார் ஞானவேலன். வளமும் நலமும் தந்து அருளுவான் வெற்றிவேலன். கவலைகளையெல்லாம் போக்கி இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியைத் தந்தருள்வான் வள்ளி மணாளன்.
கார்த்திகை தீபங்களின் மாதம். தீபங்களில் தெய்வம் உறைந்திருக்கிறது என்பார்கள். தீபத்தையும் தீப ஜோதியையும் கடவுளாகவே பாவித்து வணங்கி வழிபடுவதற்கான அற்புதமான மாதம்.
கார்த்திகை மாதத்தில்தான் திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிவாலயங்களில் நடைபெறும். சிவாலயங்கள் மட்டுமின்றி முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் திருக்கார்த்திகை தீப விழா விமரிசையாக நடைபெறும்.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகேயனை தரிசிப்பது மகத்தான பலன்களைத் தந்தருளும். செவ்வாய்க்கிழமை என்பதே முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய நாள். செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் என்பவர் பூமிகாரகன். எனவே முருகப்பெருமானை வணங்கி வழிபட்டாலே, வீடு மனை வாங்கும் யோகம் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், செவ்வாய்க்கிழமைகளில் முருகக் கடவுளை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில், செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை மனதார வேண்டுங்கள். காலையும் மாலையும் பூஜையறையிலும் வீட்டு வாசலிலும் விளக்கேற்றி வேண்டிக்கொள்ளுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தனை வேண்டுங்கள்.
வளமும் நலமும் தந்து அருளுவான் வெற்றிவேலன். கவலைகளையெல்லாம் போக்கி இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியைத் தந்தருள்வான் வள்ளி மணாளன்.