ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மிதுன ராசி வாசகர்களே  (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 15.11.2020 சுக்ல பட்சத்து பிரதமை திதி, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கிம்ஸ்துக்கினம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோக நாளில் சரத்ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி ஊன் தொழில் புரியும் காலத்திலும் தசிணாயனப் புன்யகாலத்தில் இரவு 09 மணி 34 நிமிடத்தில் மிதுனம் லக்னத்தில் நாவம்ச சக்கரத்தில் கும்பம் லக்னத்தில் ஆன்மீக அறிவொளி கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனிபகாவனின் வீடான மகரம் ராசிக்குள் நுழைகிறார்.

குருபகவான் இப்போது பெயர்ச்சியாகி சனிபகவானுடன் சென்று சேர்வதாலும், சனிபகவானின் ராசிகளாகிய மகரம் மற்றும் கும்பத்திலும் தொடர்ந்து பயணம் செய்ய இருப்பதாலும் உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும். கைகளில் பணப்புழக்கம் குறையும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும். சனிபகவான் எதையும் சுருக்குபவர். குருபகவானோ எதையும் பெருக்குபவர்.

பெருகி வளர்க்கும் கிரகம் குருபகவான் சுருக்கி சுண்ட வைக்கும் கிரகமான சனிபகவானுடன் சேர்வதால் உணவுத் தட்டுப்பாடு வரும். வெங்காயம், தக்காளி, கோதுமை தட்டுப்பாடு வரும். பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை விழும். தங்கத்தின் விலை மேலும் உயரும். நிலக்கரி, தங்க சுரங்கங்கள் அதிகரிக்கும். பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, பெட்ரோகெமிக்கல், தங்கப் படிகங்கள் செயற்கைக் கோள் உதவியுடன் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும். ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் பாதியாக உடையும். கர்ப்பச்சிதைவுகள் அதிகரிக்கும்.
ராணுவம், காவல்துறை, பலப்படுத்தப் படும்.

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும். எலக்ட்ரிக்கல், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியாவே தயாரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு இந்தியாவில் முதலீடு செய்யும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பழமையான வைத்திய முறைகள் பிரபலமாகும். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மக்கள் யதார்த்தமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கத் தொடங்கும். கல்வி முறை மாறும், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் கல்வி முறை இப்போது பிரபலமானாலும் வரும் செப்டம்பர் 2021 முதல் வகுப்பறை கல்வி வழக்கத்திற்கு வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி நவீன வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பாக, இயற்கையாக வாழ வழி வகுக்கும்.

மிதுன ராசி வாசகர்களே

குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள் நீங்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஓரளவு பணவரவையும் தந்த குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை எட்டாம் வீட்டில் மறைவதால் எதையும் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் சின்னச் சின்ன மோதல்கள் வந்து நீங்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் சில இடங்களில் கொடுத்த வாக்கு தவறலாம். தங்க நகைகள் களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தைத் தவிர்த்துவிடுங்கள். யாருக்காகவும் ஜாமீன், உத்திரவாதக் கையெழுத்திடாதீர்கள். தகுதியில் குறைந்தவர்கள், வயதில் குறைந்தவர்களை அனுசரித்துப் போக வேண்டி வரும். உங்களின் இலக்கு களைப் போராடிப் பிடிக்க வேண்டி வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். என்றாலும் வீண் சந்தே கத்தால் அவ்வப்போது விவாதங்கள் வரும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனம்விட்டுப் பேசுங்கள்.

குருபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். குரு, உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் அசதி, சோர்வு, படபடப்பு விலகும். தாயாரின் உடல்நிலை சீராகும். அவருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். குரு, உங்கள் 12-ம் வீட்டையும் பார்ப்பதால் கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் அதிரடி முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரருக்குத் திருமணம் கூடி வரும். வெளியூர்ப் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆசைபட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள்.

06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இங்கிதமாகப் பேசி பல விஷயங்களைச் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் அமைதியுண்டாகும்.

05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சகோதர வகையிலும், வீடு சொத்து பராமரிப்பு வகையிலும் செலவினங்கள் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும். புறநகர் பகுதியில் வீட்டு மனை அமையும்.
23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் குருபகவான் செல்வதால் உடல் அசதி, சோர்வு வந்து செல்லும். பூர்விகச் சொத்துப் பிரச்சினை வெடிக்கும்.

குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அதிசாரமாகவும், வக்கிரமாகவும் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். அரைகுறையாக நின்று போன வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும்.

குரு எட்டாம் இடத்தில் மறைவதால் வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். மக்களின் ரசனையை அறிந்து செயல்படுங்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களுக்கு அதிக முன்பணம் தர வேண்டாம். அவர்களின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அன்பாக நடத்துங்கள். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அனாவசியப் பேச்சைத் தவிர்க்க வேண்டும்.

இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருவாய் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்

சென்னை பாடியில் உள்ள வலிதாயநாதர் கோவிலில் வீற்றிருக்கும் குருபகவானைச் சென்று தரிசியுங்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT