ஆன்மிகம்

ஸ்லோகம் தெரியலையா... இதை மட்டும் சொல்லுங்கள்! - நவராத்திரி ஸ்பெஷல்

வி. ராம்ஜி

எல்லா தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதமான சாந்நித்தியம் இருக்கிறது. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய ஸ்லோகங்கள், காயத்ரி மந்திரங்கள் இருக்கின்றன. ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன.

அந்தந்த தெய்வங்களின் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவார்கள். அந்த தெய்வங்களின் காயத்ரியைச் சொல்லி பூஜிப்பார்கள். ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து உரிய மலர்களைக் கொண்டு வணங்குவார்கள். மந்திரங்களை உச்சாடனம் செய்து தங்கள் பிரார்த்தனையை முன்வைப்பார்கள்.

நவராத்திரி காலத்தில், ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான அம்பிகையரைத் துதிக்கச் சொல்லியிருக்கிறது சாஸ்திரம். அந்தந்த அம்பிகையை, உரிய ஸ்லோகம் சொல்லியோ ஸ்தோத்திரம் சொல்லியோ உரிய காயத்ரியைச் சொல்லியோ வழிபட அறிவுரை நடத்தியிருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

‘எனக்கு ஸ்லோகமும் தெரியாது, மந்திரமும் புரியாது’ என்று சிலர் வருந்தலாம்.‘அம்பாளை வழிபட எனக்கு எந்த ஜபமும் தெரியாதே...’ என்று கவலைப்படலாம்.
கவலையே வேண்டாம். மந்திரம் தெரியாமல் போனால் பரவாயில்லை. ஸ்லோகங்கள் தெரியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். ஸ்தோத்திரங்கள் தெரியாதே என்று புலம்பவே வேண்டாம்.

‘ஓம் லலிதாதேவியே நமஹ’ என்று சொன்னால் போதும். இதை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னால் போதும். நவராத்திரி காலத்தில், பூஜையறையில் அமர்ந்து, 108 முறை சொல்லி, அம்பிகையை வழிபடுங்கள். தினமும் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள்.முடியும்போதெல்லாம் சொல்லுங்கள். அனைத்து நலன்களையும் தந்தருள்வாள் தேவி.

இப்படி 108 முறை சொல்லும் போது, அம்பாள் படத்துக்கோ அல்லது விக்கிரகத் திருமேனிக்கோ செவ்வரளி மலர்களோ அல்லது செந்நிற மலர்களோ கொண்டு அர்ச்சித்து ஆத்மார்த்தமாக வழிபடுவது இன்னும் விசேஷம். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். ஐஸ்வரியம் குடிகொள்ளும். சந்தோஷமும் நிம்மதியும் நிலைக்கும்.

நவராத்திரி நாளில் மட்டுமின்றி, எல்லா நாளும் சொல்லலாம். செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் மறக்காமல் சொல்லுங்கள். மாங்கல்ய வரம் தருவாள். மாங்கல்ய பலம் தருவாள். கடன் தொல்லையில் இருந்தும் தரித்திர நிலையில் இருந்தும் மீட்டெடுத்து அருளுவாள் தேவி.

SCROLL FOR NEXT