ஆன்மிகம்

தென் திருப்பதி பிரம்மோற்சவத்தில் ஒலித்த மல்லாரி!

வா.ரவிக்குமார்

கோவையில் தென் திருப்பதி என்னும் பெருமையைப் பெற்றது தக்ஷிண திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம். இந்த ஆலயத்தின் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கடந்த செப்.18-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடக்கிறது. ஆலயத்துக்கு உரிய சம்பிரதாயங்களுடன் அங்குரார்ப்பணம், சின்ன சேஷ வாகனம், ஸ்நாபன திருமஞ்சனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், முத்துப் பந்தள் வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனங்களில் இறைவன் மலையப்பசாமியின் வீதி உலா நடைபெறுகிறது.

வேங்கடேஸ்வரன் வீதி உலாவில் மல்லாரி

திருக்கோயில்களில் நாகஸ்வர இசை இன்றியமையாதது. தேர்த் திருவிழா, திருவீதி ஊர்வலம், தெப்பத் திருவிழா இப்படி எல்லா ஆன்மிக விழா வைபவங்களிலும் நாகசுரம் வாசிக்கப்படுகிறது. இதில் சிவ ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் நாகஸ்வரம் வாசிக்கும் முறையில் சிறிய வித்தியாசம் இருக்கும்.

திருவீதி உலா வருதலின் போது பிரதானமாக ‘மல்லாரி’ எனும் நாகஸ்வரத்துக்கே உரித்தான தத்தகாரமான வரிகளற்ற இசைக்கூறு வாசிக்கப்படுவதுண்டு. அது கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்திருக்கும். அண்மையில் தென் திருப்பதி ஆலயத்தில் ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி முத்துப் பந்தள் வாகனத்தில் வீதி உலா வரும்போது சுவாமிமலை எஸ். மணிமாறன் நாகஸ்வர குழுவினர் வழங்கிய மல்லாரி இசையை கேட்டு மகிழுங்கள்.

மல்லாரி இசையைக் கேட்கவும் காணவும்:

SCROLL FOR NEXT