வி.ராம்ஜி
சூரிய கிரகணம் நாளைய தினம் (26.12.19). வியாழக்கிழமையான அன்றைய தினம் கிரகணம் ஆரம்பித்து முடிகிறது. விகாரி வருஷம் மார்கழி 10ம் தேதி 26.12.19 வியாழக்கிழமை, மூல நட்சத்திரத்தில் காலை 08.08 மணிக்கு ஆரம்பித்து, பகல் 11.19 மணிக்கு முடிகிறது சூரிய கிரகணம்.
கிரகண மத்ய காலம் என்பது காலை 9.34 மணிக்கு இருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முன்னதாக, முதல்நாள் 25.12.19 மாலைக்குப் பிறகு உணவு உட்கொள்ளக்கூடாது என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். இதில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் ஆகியோர் உணவு உட்கொள்ளலாம். அதாவது இரவுக்குள் உணவு உட்கொள்ளலாம்.
மறுநாளான வியாழக்கிழமை, 26.12.19 காலை 08.08 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகிறது. மத்ய காலம் என்று சொல்லப்படும் காலை 09.34 மணிக்கு கிரகண கால தர்ப்பணம் செய்யவேண்டும். சென்னையின் சூரிய உதய நேரப்படி காலை 11.19 மணிக்கு மோக்ஷ காலம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சூரிய கிரகணம் நிறைவடைகிறது.
எனவே, கிரகண காலத்தையொட்டி காலையில் எழுந்து, குளித்துவிட்டு, தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டிருக்கலாம். காயத்ரி ஜபம் செய்யலாம். அதாவது, காலை 08.08 மணிக்குள் ஸ்நானம் செய்யவேண்டும்.பிறகு 9.34 மணி வரை சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்.
பின்னர், கிரகண மத்ய காலமான 9.34 மணிக்கு பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும். முடிந்தால், அரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்கு, தட்சணையை ஆச்சார்யருக்கு வழங்கலாம். பின்னர் கிரகணம் முடியும் வரை ஜபம் சொல்லிக்கொண்டிருக்கலாம்.
அதன் பிறகு, காலை 11.19 மணிக்கு கிரகணம் முடிந்ததும் மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டும். பெண்கள் தலைக்குக் குளிக்க வேண்டும்.
பிறகு வீட்டில் விளக்கேற்றி, பூஜைகள் செய்துவிட்டு, சுவாமிக்கு நைவேத்தியம் செய்துவிட்டுத்தான் உண்ணவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.