ஆனி மாத அமாவாசைத் தர்ப்பணம் நாளை 2ம் தேதி செவ்வாய்க்கிழமை. நாளைய தினம் அமாவாசை. முன்னோருக்கு உரிய நன்னாள். இந்தநாளில், பித்ருக்கள் ஆராதனை செய்ய மறக்காதீர்கள்.
ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, மகாளய பட்ச காலம், கிரகண காலம் என்று மொத்தம் 96 தர்ப்பணங்களைச் செய்ய வலியுறுத்தப்படுகிறது.
இந்த நாட்கள், முன்னோர் ஆராதனைக்கு உரிய நாட்கள். பித்ருக்கள் ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கின்ற தருணம். எனவே எதைச் செய்யாவிட்டாலும் முன்னோர் ஆராதனையை, வழிபாட்டை, வேண்டுதலைச் செய்யவேண்டும். இதனால், நம் குடும்பமும் நம் சந்ததியும் சீரும் சிறப்புமாக வளரும்; நிம்மதியும் சந்தோஷமுமாக இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நாளை 2ம் தேதி செவ்வாய்க்கிழமை அமாவாசை. ஆனி மாத அமாவாசை. எனவே, நாளைய தினமான செவ்வாய்க்கிழமை, தர்ப்பணம் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முன்னோரின் படங்களை சுத்தப்படுத்தி, பூக்களால் அலங்கரியுங்கள். முன்னதாக, வீட்டைச் சுத்தம் செய்யுங்கள். தர்ப்பணமோ வேறு என்ன முறையோ அதன்படி முன்னோரை வணங்குங்கள்.
முக்கியமாக, காகத்துக்கு உணவிடுங்கள். குறிப்பாக, எள் கலந்த சாதம் வழங்குங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். இதில் குளிர்ந்து போய், உங்கள் வீட்டையே சுபிட்சமாக்கி அருள்வார்கள் முன்னோர்கள்.
ஆனி அமாவாசை (2.7.19) முன்னோர் ஆராதனையை மறக்காதீங்க!