ஆன்மிகம்

சொல்லும் செயலும்

செய்திப்பிரிவு

சொல்லால் ஓரளவுதான் வெற்றி பெறலாம். ஆனால், செயலால் முழு வெற்றியும் பெற்றிட முடியும். நாம் சொன்ன சொல்லை மறந்துவிடலாம். ஆனால் நமது செயல் பிற்காலங்களில் நின்று மிளிரும். எனவே நாம் எந்தச் செயலைச் செய்தாலும் முறையாகத் தவறின்றிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவரே உண்மையான முஸ்லிம்.

இறைவன் தேவையற்றவன்; இறைவனுக்காகச் செலவு செய் வதை அவன் ஏற்றுக்கொள்வதில்லை. முதலில் தாய், தந்தை, சகோதர-சகோதரிகள், உற்றார்-உறவினர், தேவையுள்ளோர், அனாதைகள், வழிப்போக்கர்கள் என்றுதான் இறைவன் வரிசைப்படுத்துகிறானே தவிர, தனக்காகச் செலவிட வேண்டும் என ஒருபோதும் சொன்னதில்லை. எனவே முஸ்லீம்களின் அடையாளம் கடுமையான, இறை நம்பிக்கை மட்டுமே.

அல்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையும்-செயலையும் பின்பற்றுகிறோம் எனச் சொல்லிக்கொண்டு அதற்கு எதிராக வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்லர். நபிகளாரின் திருமணங்கள் வெறும் பேரீச்சம் பழங்களை மட்டுமே உணவாக வைத்து நடைபெற்றன. ஆனால், இக்காலத் திருமணங்கள் ஆயிரம் பேருக்குப் பிரியாணி விருந்து, 100 பவுன்கள், சீர் பொருட்கள் எனச் சீர்கெட்டுக் காணப்படுகின்றன.

நபிகளின் சொல்- செயல்படி எளிய வாழ்க்கை மற்றும் சகோதரத்துவ ஒற்றுமைகள் ஆகியவற்றை எக்காலத்திலும் முஸ்லீம்கள் மறக்கக் கூடாது.

SCROLL FOR NEXT