அகிலத்தில் உள்ள அனைத்து உயிர்களிலும் அம்பிகை இருக்கிறாள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் கொலு. படிகளை எப்படி அமைக்க வேண்டும் என்று தேவி பாகவதம், தேவி மகாத்மியம் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது. கொலுப்படிகளை ஒற்றைப்படையில்தான் அமைக்க வேண்டும்.
முதல் படியில் ஓரறிவு உயிர்களான செடி, கொடி, பூங்கா, தோட்டம் போன்றவற்றின் வடிவங்களை வைக்கலாம்.
இரண்டாம் படியில் ஈறறிவு உயிர்களான அட்டை, நத்தை, சங்கு, ஊறும் பூச்சியின் வடிவங்களை வைக்கலாம்.
மூன்றாம் படியில் மூவறிவு உயிர்களின் வடிவங்களை (கரையான், எறும்பு) வைக்க வேண்டும்.
நான்காம் படியில் நான்கறிவு உயிர்களின் வடிவங்களை (சிறு வண்டு, பறவைகள்) வைக்கலாம்.
ஐந்தாம் படியில் ஐந்தறிவு உயிர்களான பசு, நாய், சிங்கம் போன்ற விலங்குகளின் வடிவங்களை வைக்கலாம்.
ஆறாம் படியில் ஆறறிவு உயிர்களான மனித வடிவிலான பொம்மைகளை வைக்கலாம். வாத்தியக்குழு, செட்டி யார் பொம்மை, திருமண கோஷ்டி போன்றவற்றை வைக்கலாம்.
ஞானிகளுக்கு ஏழாவது அறிவும் உண்டு என்று சொல்வார்கள். அதனால் ஏழாவது படியில் மகான்கள், ஞானிகள், தபசிகளின் வடிவங்களை வைக்கலாம்.
எட்டாம் படியில் தெய்வ அவதாரங்களை வைக்க வேண்டும்.
ஒன்பதாம் படிதான் முக்கியம். அதில் பூரண கும்பம் வைத்து நிறைவு செய்யலாம்.
வாழ்க்கை தத்துவத்தை படிப்படியாக உணர்த்தத்தான் கொலு படிகளில் பொம்மை வைக்கிறார்கள். நவராத்திரி வழிபாடு செய்து நவகிரக நாயகியின் அருளைப் பெறுவோம்.