ஆன்மிகம்

பக்தியைக் கடத்திய இசை

வா.ரவிக்குமார்

சென்னை, மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் ஸமாஜில் 64வது ஆண்டாக ஸ்ரீராமநவமி விழா கொண்டாடப்பட்டது. பிரபலமான கலைஞர்கள் முதல் வளரும் கலைஞர்கள் வரை பலரும் அயோத்தியா மண்டபத்தில் சங்கீத உபன்யாசம், வாத்திய இசை, கர்னாடக இசை, பக்தி இசை போன்றவற்றை அளித்தனர். கடந்த 18 அன்று நடந்த இளம் கலைஞர் பார்கவ் எஸ்.ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி இசையோடு பக்தியையும் பரப்பியது.

இசைக்கு ஆதாரமான நேர்த்தி

ராம், சுகுணா புருஷோத்தமன், ஓ.எஸ். தியாகராஜன், சியாமளா வெங்கடேசன் ஆகியோரிடம் இசைப் பயிற்சியை பெற்றுள்ளார் பார்கவ். இவர்களோடு இவரின் தந்தை டாக்டர் சுப்பிரமணியிடமும் பார்கவ் இசை படித்திருக்கிறார். குருமார்களிடம் அவர் படித்த இசையின் நேர்த்தி மேடையில் அவர் பாடும் விதத்திலும் அருமையாக வெளிப்பட்டது. விஸ்தாரமான ஆலாபனையாகட்டும் துரித காலத்தில் வந்து விழும் சங்கதிகளாகட்டும் பார்கவிடமிருந்து அனுபவபூர்வமாக வெளிப்பட்டதோடு, கேட்பவர்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் வகையில் அமைந்தது அவரின் இசை நிகழ்ச்சி. பார்கவ் ஹரிஹரனுக்கு முறையே வயலின், மிருதங்கம், முகர்சிங் வாத்தியங்களை வாசித்த, சுகன்யா, கும்பகோணம் சுவாமிநாதன், கிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்பும் இசையின் இனிமைக்கு பெருமை சேர்த்தது.

ஆஞ்சநேய ரகுராமா

சுகுணா புருஷோத்தமன், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், சுப்பிரமணிய பாரதியார், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் ஆகியோரின் சாகித்யங்களைப் பாடிப் பரவசப்படுத்தினார். ராமநவமி திருவிழாவில் ஆஞ்சநேய உற்சவத்திற்கு முன்னதாக நடந்த இந்த நிகழ்ச்சியில், சுவாதி திருநாளின் `ஆஞ்சநேய ரகுராமா’ சாகித்யத்தை பிரதானமாக எடுத்துப் பாடியது மிகவும் பொருத்தமாகவும் மிகவும் சவுக்கியமாகவும் இருந்தது.

SCROLL FOR NEXT