ஆனி மாதப் பிறப்பு தர்ப்பணம் நாளை 15ம் தேதி சனிக்கிழமை. மாதப் பிறப்பான 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட, நாளைய தினமான 15ம் தேதி மாதப்பிறப்புக்கான தர்ப்பணம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே மறக்காமல் முன்னோர் ஆராதனையை மறக்காமல் நிறைவேற்றுங்கள்.
ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, மகாளய பட்ச காலம், கிரகண காலம் என்று மொத்தம் 96 தர்ப்பணங்களைச் செய்ய வலியுறுத்தப்படுகிறது.
இந்த நாட்கள், முன்னோர் ஆராதனைக்கு உரிய நாட்கள். பித்ருக்கள் ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கின்ற தருணம். எனவே எதைச் செய்யாவிட்டாலும் முன்னோர் ஆராதனையை, வழிபாட்டை, வேண்டுதலைச் செய்யவேண்டும். இதனால், நம் குடும்பமும் நம் சந்ததியும் சீரும் சிறப்புமாக வளரும்; நிம்மதியும் சந்தோஷமுமாக இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.
நாளை மறுநாள் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதப் பிறப்பு. ஆனாலும், நாளை 15ம் தேதி சனிக்கிழமை இரவே மாதம் பிறந்துவிடுகிறது. எனவே, நாளைய தினமான சனிக்கிழமை, தர்ப்பணம் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முன்னோரின் படங்களை சுத்தப்படுத்தி, பூக்களால் அலங்கரியுங்கள். முன்னதாக, வீட்டைச் சுத்தம் செய்யுங்கள். தர்ப்பணமோ வேறு என்ன முறையோ அதன்படி முன்னோரை வணங்குங்கள்.
மேலும் காகத்துக்கு உணவிடுங்கள். குறிப்பாக, எள் கலந்த சாதம் வழங்குங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். இதில் குளிர்ந்து போய், உங்கள் வீட்டையே சுபிட்சமாக்கி அருள்வார்கள் முன்னோர்கள்.