பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அசுவினி:
சொந்த முயற்சியாலும், மனத்துணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் அசுவினி நக்ஷத்திர அன்பர்களே.
நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த வருடம் சில காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தைக் கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் ஒருவித அழுத்தம் பேச்சில் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படுவீர்கள். மனதில் தடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
தொழில் ஸ்தானம் நடுநிலைமையாக இருக்கிறது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.
பெண்கள் சிக்கலான விஷயங்களைக் கூட சுமுகமாக முடித்து விடுவார்கள். மனதில் குழப்பமும் தடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.
கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. எந்தக் காரியத்திலும் அவசரம் காட்டத் தோன்றும். நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.
அரசியல் துறையினர், எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்.
மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: மஹாகணபதியை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
மதிப்பெண்: 75% நல்ல பலன்கள் நடப்பது உறுதி.
+ ஏற்றம் காண்பீர்கள்
- எதிலும் மனத்தடுமாற்றம் உண்டாகும். நிதானம் தேவை.