சுவிசேஷ கீதங்களும் தேவாலயத் திருப்பணிப் பாடல்களும் மதமாச்சரியங்களைக் கடந்து எல்லோரின் காதுகளிலும் தேன் பாய்ச்சும் மாதம் இது.
"தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே...
அதைத் தேடியே நாடி ஓடியே
வருவீர் திருச்சபையானோரே..."
- என்னும் பாடலை பி.சுசிலாவின் குரலில் அந்தக் காலத்தில் நேரடியாக அவர் பாடிக் கேட்டவர்கள் பாக்கியவான்கள். இப்போது அந்தப் பாடலை யூடியூபில் பதிவேற்றி, இயேசுவின் அருளைப் பெறவைத்திருக்கின்றனர்.
உலக ரட்சகர் இயேசு பிரான் அவதரித்த செய்தியையும் அற்புதங்களையும் விளக்கும் எண்ணற்ற கிறிஸ்தவப் பாடல்கள் புதிது புதிதாக பாடப்பட்டாலும், இந்தத் தலைமுறைக்கு அதிகம் அறிமுகமில்லாத பாடல்களைக் காற்றில் தவழவிட்டவர் பாடகி ஜிக்கி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் மொழிகளிலும் ஏறக்குறைய ஆயிரம் பாடல்களைப் பாடியிருப்பவர் பழம்பெரும் பாடகி ஜிக்கி.
என்னை மறவா யேசுநாதா, எண்ணிலடங்கா, இன்ப இயேசு, காலை நேர, நிகரே இல்லாத, தோத்திரம், உன் பாதம் பணிந்தேன்... இப்படி எண்ணற்ற கிறிஸ்தவப் பாடல்களைப் பாடியிருந்தாலும், இன்றைக்கும் நம் மனதின் ஆழத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்...
தந்தானை துதிப்போமே..
திருச்சபையாரே கவி பாடிப்பாடி
தந்தானை துதிப்போமே!