அரியலூர் / தஞ்சாவூர்: கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்ட மூலவர் பெருவுடையாருக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து, அன்னாபி ஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை முதல் சாதம் சமைக்கப்பட்டு லிங்கத்தின் மீது சாற்றப்பட்டு, பலகாரங்கள், பழங்கள், பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. லிங்கத்தின் மீது சாற்றப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறும் என்பதும், இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கங்களை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து, மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மூலவர் மீது சாற்றப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மீத மிருந்த சாதம் அருகில் உள்ள குளத்தில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையினர் மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டியினர் செய்தனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், அதன்மேல் 13அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் உள்ளது.
இக்கோயிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் பூசணிக்காய், வாழைக்காய், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், பாகற்காய், பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு, வெண்டை, சுரைக்காய், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட காய்கனிகள், இனிப்பு வகைகள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அலங்காரம் கலைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.