ஆன்மிகம்

அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு! 

இரா.கார்த்திகேயன்

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு இன்று (மார்ச் 12) காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் உத்தராயின காலமான மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது சூரிய பகவான் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வது ஐதீகம்.

இந்த ஆண்டு இன்று சூரிய உதயத்தின்போது, பழமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி ஊடுருவி, அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்து, வணங்கியது. அப்போது பொன்னிறமாக அவிநாசிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 6.50 மணிக்கு தொடங்கி, 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக இருந்து, படிப்படியாக மறைய ஆரம்பித்தது. இந்த பூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வு ஓரிரு நாள்களுக்கு காலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT