தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் 
ஆன்மிகம்

தைப்பூச திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (பிப்.11) அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை முதலே பெருந்திரளாக பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கட்டண தரிசனம், இலவச தரிசனத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் பால்குடங்கள் மூலஸ்தானத்திலுள்ள தங்க வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மலையிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் மலையடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT