வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் 
ஆன்மிகம்

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்பு

க.ரமேஷ்

கடலூர்: கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அது போல் இந்த ஆண்டு 154 வது ஜோதி தரிசன விழாவையொட்டி, நேற்று (பிப்.10)சத்திய ஞான சபையில் அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து சத்திய ஞான சபையில் காலை 10 மணியளவில் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று (பிப்.11)முக்கிய விழாவான தைப்பூச ஜோதி தரிசன விழா சத்திய ஞான சபையில் நடைபெற்றது.

சத்தியஞான சபையில் காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு 'அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை' என்ற முழக்கத்துடன் ஜோதி தரிசனம் செய்தனர்.

தொடா்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ம் தேதி காலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதையடுத்து 13ம் தேதி வியாழன் கிழமை 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறும்.

தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி வடலூரில் வெளிநாடு ,வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஜோதி தரிசனம் செய்தனர். தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபை, வள்ளலார் தெய்வ நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்து அறநிலை துறை அதிகாரிகள் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துள்ளனர்

வடலூரில் கடலூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நெய்வேலி டிஎஸ்பிசபியுல்லா, வடலூர் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் மற்றும்1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து வடலூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. வடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT